தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்: நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் திரு. எஸ்.செல்வேந்திரா அவர்களுடன் நான் அவரைச் சந்தித்தேன். அந்த தருணத்தில் கௌரவ பிரதமரும் உடனிருந்தார்.

மாகாண ஆளுநர்களுக்கு அதிக பொறுப்பதிகாரத்தை வழங்கும் பாராளுமன்ற ஆளுகைக் குழுவை உள்ளடக்கிய தனது ஆட்சித் திட்டத்தை ஜனாதிபதி எமக்கு விரிவாக விளக்கினார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அந்தந்த மாகாண ஆளுநர்களின் தலைமையில் பணி செய்ய வேண்டும் என்பது அவரது யோசனை. மேற்படி திட்ட யோசனைக்கு ஆஸ்திரியா நாட்டை உதாரணமாகக் குறிப்பிட்டார். (இந்த இடத்தில் அவரது உதாரணம் பொருத்தமற்றது. ஏனெனில் ஆஸ்திரியா ஒரு கூட்டாட்சி நாடு).

மேலும், மத்திய அரசாங்க அமைச்சுக்களால் மாகாணங்களில் காணிகளை அபகரிப்பது தொடர்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி, அமைச்சுக்களால் அபகரிக்கப்பட்ட வன நிலங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு மாகாண அமைச்சுக்களும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார். தேவைப்பட்டால் அதிகபட்சம் 2 ஏக்கர் நிலத்தை மாத்திரம் அரசு கையகப்படுத்தலாம் என்றும் கூறினார்.

அதற்கு நான், “அந்தந்த மாகாண அரசாங்கத்தின் சம்மதத்தினையும், அனுமதியினையும் பெறாமல் , மாகாணங்களில் மத்திய அரசாங்கத்தால் எந்தவொரு காணியும் சுவீகரிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்” என்றேன். இதற்கு ஜனாதிபதி அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தேசியப் பாடசாலைகள் குறித்து அவர் கூறுகையில், நாட்டிற்கு 1,000 தேசியப் பாடசாலைகள் தேவையில்லை, 50 தேசியப் பாடசாலைகள் போதும். எனக்கூறினார். இதன் போது நான், “எந்தவொரு மாகாண பாடசாலைகளையும் மத்திய அரசால் கையகப்படுத்த முடியாது எனவும், இது தொடர்பில் எமது கூட்டணி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதையும்” சுட்டிக் காட்டினேன்.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்காக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்களை தனது அரசின் வலைக்குள் விழ வைத்து அதனை ஜெனிவாவிற்கு காட்டி தப்பித்துக் கொள்வதற்கான நாடகம் போன்றே எமக்கு தோன்றினாலும் நான் அதனை விமர்சிக்கவில்லை. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் 46/1 என்ற கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில் ஜெனிவாவின் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அரசு ஏற்கனவே நிராகரித்திருந்தமையினால் ஆகும்.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் மூலம் எவ்வாறு நாட்டிற்கு நிதி உதவி செய்ய முடியும் என்பது குறித்த ஆவணத்தை குறிப்புக்களுடன் முன்வைக்குமாறு என்னிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முற்றாகப் புறக்கணித்து முழு நாட்டினதும் மத்திய நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்துவதே அவரது மறைமுக நோக்கம் என்பதை அவருடன் கலந்துரையாடிய போது எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

“தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் அனைவராலும் முன்வைக்கப்படும்  கோரிக்கைகளும், இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை. இதனை செயற்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகார செயற்பாடுகளை உடன் நிறுத்துவதுடன், இராணுவத்தின் உதவியுடன் தமிழர் தாயக நிலங்களில் பௌத்த விகாரைகளை கட்ட முயலும் நபர்களை தடுத்து நிறுத்த வேண்டும். இவையே தற்போது எமக்கு தேவையானவை என்பதை நான் மிகவும் வலியுறுத்திக் கூறினேன்.

தமிழர்கள் தமது மாகாணங்களில் அரசியல் தலைமைத்துவத்தையும், ஆட்சியையும் பெற்றுக் கொள்வதற்கு திருப்திகரமான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை தற்காலிக நடவடிக்கையாக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் எமது தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் பகிர்வு ஏற்படுத்தப்படும் வரை மேற்கொள்ளப்படும்  13வது திருத்த அமுலாக்க செயற்பாடுகளில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் என கௌரவ ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இது நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்ற பொருள் அல்ல.

எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததுடன், எம்மை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே அவருக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம்.

இறுதியாக ஜனாதிபதி எம்மிடம் கேட்டிருந்த முன்மொழிவு ஆவணத்தை கையளிப்பதாக உறுதியளித்து எம்மை அழைத்தற்கு நன்றி தெரிவித்து விடை பெற்றோம். – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.