“எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் மக்களுக்காக அல்ல; சிறை செல்வதிலிருந்து தப்பவே” – இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா சாடல்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

இலங்கை மக்கள் கடுமையான பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளைச் சந்தித்த காலத்தில் ஒன்றாக இணையாத எதிர்க்கட்சித் தலைவர்கள், தற்போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஒன்று கூடுவதாக ‘இடதுசாரி மையத்தின்’ அழைப்பாளர் சமீர பெரேரா கடுமையாகச் சாடியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை மக்கள் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் பால் மா ஆகியவற்றிற்காக நீண்ட வரிசைகளில் நின்று கடும் துன்பங்களை எதிர்கொண்டனர். மாணவர்கள் முச்சக்கர வண்டிகளில் அமர்ந்து வீட்டுப்பாடங்களைச் செய்யும் அளவிற்கு நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், அந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்காகக் குரல் கொடுக்கவோ அல்லது ஒன்றாக இணைந்து செயற்படவோ இந்த அரசியல்வாதிகள் முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது எதிர்க்கட்சியினர் திடீரென ஒன்று கூடுவது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அல்ல என்றும், மாறாக தங்களின் சுய அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அண்மையில் இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சட்ட நடவடிக்கை மற்றும் சிறை தண்டனையை எதிர்நோக்கும் நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட சமீர பெரேரா, அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பாதிப்பேர் சிறை செல்லும் கட்டத்தில் உள்ளவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் சிறையில்தான் மீண்டும் சந்திக்க நேரிடும் என்றும் காட்டமாகக் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அவசர காலங்களில் மக்கள் பக்கம் நிற்காத எதிர்க்கட்சிகள், தற்போது தங்களின் மீதான சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே ஒன்று கூடுகின்றன என்ற இடதுசாரி மையத்தின் இந்த விமர்சனம் தற்போது நாட்டின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

