கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 20 கோடி பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ போதைப் பொருளுடன் கனடா நாட்டுப் பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த குறித்த சந்தேகநபரின் நடத்தை மற்றும் பயணப் பொதிகள் மீது சந்தேகமுற்ற விமான நிலைய சுங்க அதிகாரிகள், அவரது உடைமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போதே பயணப் பொதிகளுக்குள் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் ஹசீஸ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கனடா நாட்டவரிடம் சுங்கப் பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு தொடர்புள்ளதா மற்றும் இலங்கையில் உள்ள எவருக்கு விநியோகிப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.


