புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்தே தடைநீக்கம்: பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

நாட்டைக் கட்டியெழுப்ப, புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்தே சில அமைப்புகள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட தடைநீக்கம் தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறினார்.மேலும் பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளைப் பெறுவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளை பெற்று கொள்ள முடியாது.எனவே அவர்களின் உதவிகளை பெற்று கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம் எனக் குறிப்பிட்டார்

தொடர்ந்தும் தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் குறித்தும், தனிநபர்கள் தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.