தமிழர் தகவல் நடுவம்(TIC) வழங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் விருதுகள் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது!


சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இலண்டன் பார்நெட் இல் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அவற்றினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி ஐ.நா. மனித உரிமைகள் தினத்தை அறிமுகப்படுத்தி 75 ஆவது ஆண்டான நடப்பாண்டில் TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இலண்டன் Barnet நகரில் அமைந்துள்ள Multi Cultural Community Centre இல் பிற்பகல் 2.00 மணிமுதல், 6.00 மணி வரை நடைபெற்றது

அனைவருக்குமான கண்ணியம் சுதந்திரம் மற்றும் நீதி (Dignity freedom and Justice for All ) என்ற கருப்பொருளை மையமாக் கொண்ட TIC யின் மேற்படி மனித உரிமைகள் தின நிகழ்வு மங்கள விளக்கேற்றல் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக பார்னட் நகர மேயர் Cllr.Nagus Narenthira அவர்களும், சிறப்பு விருந்தினராக பிரித்தானியாவின் பார்னட் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் துணைத்தலைவருமான Theresa Villiers உம் கலந்து சிறப்பித்தனர்.

அதே வேளை இந் நிகழ்வின் சிறப்பு பேச்சாளர்களாக கிங்ஸரன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியரும் மனித உரிமை மற்றும் சமூக நீதியாளருமான DR Andy அவர்களும் இனப்படுகொலைகளை தடுப்பதற்கான APPG யின் இயக்குனர் Andy Bailey அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அத்துடன் மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கல்வியலாளர்கள் மற்றும் TIC யின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதான சிறப்பம்சமாக TIC யினால் வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் விருதுகள் இம்முறை இருவருக்கு வழங்கப்பட்டது.

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் (ITJP) இயக்குனரும் முன்னாள் ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் ஐ.நா.வின் ஆலோசகருமான Frances Harrison அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயலாற்றிவரும் ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான Bashana Abeywardane அவர்களுக்கும் மேற்படி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

TIC யின் நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் இயங்குனருமான மறைந்த வரதகுமார் அவர்களின் ஞாபகார்த்த விருது எழுத்தாளரும் மனித மரபியல் கல்வி ஆய்வாளருமான Dr. Siva Thiagarajah அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் மறைந்த இயக்குனர் வரதகுமார் அவர்கள் தொடர்பிலான ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதுடன் இலண்டன் மெய்வெளி அரங்க கலைஞர்களின் “நான் புதைக்கப்பட்டவன்”(I am Buried) சிறப்பு நாடக மேடையேற்றம் பலரது மனங்களையும் கவர்ந்திருந்தது. நாடக கருப்பொருளும் ஆற்றுகை செய்யப்பட்ட முறைமையும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பாற்றலும் மனித உரிமை என்ற கருவூலத்தின் மேல் மேற்குலகின் நடைமுறைகளை கேள்விக்குட்படுத்தும் ஒரு ஆற்றுகையாக இடம்பெற்றிருந்தது.அவையில் இருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பிரமுகர்களையும் ஏனையவர்களையும் வெகுவாக பாதித்தவிட்டிருந்த மேற்படி அரங்க ஆற்றுகையானது மெய்வெளி நாடகப் பயிலக மற்றும் ஊடகத்தின் இயக்குனர் திரு.சாம் பிரதீபன் அவர்களினால் எழுதி இயக்கப்பட்டிருந்ததோடு மெய்வெளியின் இணை இயக்குனர் றஜித்தா அவர்களின் இணை இயக்கத்திலும் நிர்வாகத்திலும் காத்திரமாக அரங்காடப்பட்டிருந்தது. நாடக மேடையேற்றத்தின் நடிகர்களாக மெய்வெளி நாடகப் பயிலக மாணவர்களும் மெய்வெளி அரங்க இயக்கத்தின் ஏனைய நடிகர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றோடு தமிழ் இளம் தலைமுறையை சேர்ந்த செல்வன் ளு.P.அலன் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய வழிப்புணர்வு சொல்லிசைப் பாடல் பலருடைய அபிமானத்தக்குரியதாய் ஆகியிருந்தது.

மேலும் TIC யின் செயற்பாட்டாளர்களான செல்வன் டிலக்‌ஷன் மனோரஜன் மற்றும் செல்வி மகிசா வரதராசா ஆகியோர் நிகழ்வு முழுவதையும் தொகுத்து வழங்கியிருந்தனர்