இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் – பிரித்தானியாவில் சிறப்பு மாநாடு

இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் பிரித்தானியாவில் நேற்றைய தினம் சிறப்பு மாநாடு ஒன்று இடம்பெற்றது.

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு எனும் கருப்பொருளில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தொடர்பிலான வழக்கறிஞர் பற்றிக் லூயிஸ் தலைமையில் பிரித்தானிய பாராளுமன்றின் சிறப்பு மண்டபத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் தாயகத்து அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரித்தானிய அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் தாயகத்திலிருந்து வருகை தந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் ஆகியோர் சிறிலங்காவில் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பு தொடர்பிலும் அவற்றிற்கு சர்வதேச தீர்வை எவ்வாறு அணுகுவது தொடர்பிலும் சிறப்புரைகள் ஆற்றினர்.

பிரித்தானியா தமிழ் இளையோர் சார்பாக செல்வி.கிசானியின் வரவேற்புரை மற்றும் செல்வன்.சர்வீனின் இனவழிப்பு சிறப்பு உரைகளைத் தொடர்ந்து, மாநாட்டுக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஆகிய Mr John McDonald’s MP, Mr Virendra Sharma MP, Lib Democratic Leader Sir Ed Davey MP, Ms Sarah Jones – MP and Shadow Minister of State for Police and the Fire Service, Mr Sam Tarry MP, Mr Gareth Thomas MP – Shadow Minister for International Trade
ஆகியோர் தமது கருத்துரைகளை வழங்கிய சமவேளை இனவழிப்புக்கான தீர்மானத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான முனைப்புகளில் ஈடுபடுவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தனர்.

இந்நிலையில் இம்மாநாட்டிற்காக தாயகத்திலிருந்து வருகை தந்து சிறப்புரையாற்றிய சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான வீ.எஸ்.எஸ்.தனஞ்சயன் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் காணிகள் அபகரிப்பு தொடர்பில் உரையாற்றினார்.

இதில் போர் நிறைவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆன போதிலும் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் நிலை உயர்மட்டத்திலேயே காணப்படுவதாக கூறினார். குறிப்பாக அடையாளம் நிறுவனத்தின் அறிக்கையின்படி இரு பொதுமகனுக்கு ஒரு இராணுவவீரர் என்ற நிலையில் முல்லைத்தீவில் இராணுவமயமாக்கல் அதிகரித்த நிலையிலேயே இருப்பதாக விசனம் தெரிவித்தார். அதேவேளை இராணுவத்தினர் தனியார் காணிகளை அபகரிப்பது மட்டுமல்லாது அவர்களே விவசாயங்களை அக்காணிகளில் செய்வதாகவும் தெரிவித்தார். இதனால் வடக்கு கிழக்கில் மக்கள் பொருளாதாரமும் பாரிய நெருக்குதலுக்கு உள்ளாவதாக கூறினார்.

அதேவேளை குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான வழக்கினை முன்னெடுப்பவர் என்ற வகையில் அங்கு மேலதிகமாக எந்தவித கட்டுமாண பணிகளையும் செய்யக்கூடாது என முல்லைத்தீவு நீதிமன்றினால் 3 தடவைகள் ஆணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அதனையும் மீறி இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் அங்கு பௌத்த விகாரை கட்டுமானப்பணிகள் இடம்பெற்று நிறைவுறும் நிலையை எட்டியுள்ளதாக கூறினார்.

அத்துடன் வடக்கு கிழக்கில் இயங்கும் அரச நிறுவனங்களும் ஒரு தலைப்பட்சமாக இயங்குவதாகவும் குற்றம் சாட்டினார். குறிப்பாக தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரசபை தன்னிச்சையாக அரசுக்கு சார்பாகவே வடக்கு கிழக்கில் இயங்குவதாகவும் அவர்களே காணிகளை அபகரிப்பதற்கு முன்னிற்பதாகவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து தாயகத்திலிருந்து இம்மாநாட்டிற்காக வருகை தந்திருந்த தவத்திரு வேலன் சுவாமிகள் தனது சிறப்புரையில் பௌத்த மயமாக்கல் என்னும் பெயரில் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் திட்டமிட்ட இனவழிப்பு நடைபெறுகின்றது. அதேவேளை இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் நேரடியாகவே கைதுகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள் என கூறினார்.

தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மதகுருக்களோ எவராக இருந்தாலும் நீதிமன்றின் எந்தவொரு பிடியாணையும் பெறாது கைதுசெய்யப்படும் நிலமையே வடக்கு கிழக்கில் நிலவுவதாக அவர் இம்மாநாட்டில் பிரித்தானிய எம்.பி.க்களிடம் தெரிவித்தார்.

இறுதியாக பௌத்த மயமாக்கல் எனும் பெயரில் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை பிரித்தானியா தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கனடாவை பின்பற்றி பிரித்தானியாவும் தமிழர்களுக்கு எதிராக தாயகத்தில் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் இம்மாநாட்டின் ஊடாக பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்தார்.

அதேவேளை Mr.Patrick Louise  (Barrister for Human Rights) மற்றும் ஜனனி ஜனநாயகம் (மனித உரிமைச் செயற்பாட்டாளர், பணிப்பாளர் Against Genocide) ஆகியோரும் உரையாற்றினர். நன்றி உரையை செல்வன்.கயீபன் சந்திரமோகன் ஆற்றினார்

பிரித்தானியாவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய செயற்பாட்டு அமைப்புகளின் அனுசரணையுடன் Tamils for Conservative, Tamils for Labour அமைப்புகளின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.