திருத்தப்பட்ட இடைகால வரவு செலவுத் திட்டம் சபையில் இன்று

2022ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இடைகால வரவு செலவுத் திட்டம், பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வரவு செலவுத் திட்டம், இன்று மதியம் ஒரு மணிக்கு சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட உரை ஜனாதிபதியினால், இன்று மதியம் ஒரு மணிக்கு சபையில் நிகழ்த்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சபை நடவடிக்கைகள் நாளைய தினம் (31) முற்பகல் 9.30 வரை ஒத்தி வைக்கப்படவுள்ளதுடன், நாளைய தினம் முதல் எதிர்வரும் இரு தினங்களுக்கு திருத்தப்பட்ட இடைகால வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தை அடுத்து, வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், அமைச்சரவை கூட்டத்தில் இடைகால வரவு செலவுத் திட்டத்திற்கான அனுமதி பெறப்படவுள்ளது.