இலங்கையில் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக இந்திய ரூபாய்!
![](https://meiveli.com/wp-content/uploads/2022/08/Untitled-1-2.jpg)
வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக இந்திய ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் தமிழ் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான பரிவர்த்தனை நாணயமாக இந்திய ரூபாய் மத்திய வங்கியினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைய மத்திய வங்கியின் நாணய சபை இதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இனிமேல் இலங்கையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்கள் உத்தியோகபூர்வமாக வங்கிகளில் இந்திய ரூபாயை பயன்படுத்தி தங்களுடைய அந்நியச்செலாவணி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். டொலர், பவுண்ஸ் மற்றும் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு நாணயங்களுக்கான கேள்விகள் அதிகமாக இருப்பதாலும், வங்கிகளில் இந் நாணயங்களின் இருப்புக்கள் இல்லாமையினால் ஏற்றுமதி இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவின் உடனான வர்த்தகங்களும் இதனால் பாதிப்படைந்து இருக்கிறது. இதை சீர் செய்யு முகமாக மத்திய வங்கி இந்த நடவடிக்கையை முன்னெடுத்து இருக்கிறத.ஆகவே தமிழர் தரப்பு தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் வர்த்தக நடவடிக்கைகளில் சுலபமாக ஈடுபடுவதற்கு இது வழி அமைக்கின்றது. நமக்குத் தேவையான மருத்துவ பொருட்களிலிருந்து அத்தியாவசியத் தேவைகள், உணவு, உடை என சகல விடயங்களையும் தருவித்துக் கொள்வதற்கும் ஏற்றுமதி செய்து கொள்வதற்கும் வர்த்தக ரீதியான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது ஒரு வரப்பிரசாதமாக தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பூகோள ரீதியாக எமக்கு அண்மையில் உள்ள பாரிய சந்தையாக இந்தியா அமைந்துள்ளது. சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இந்த சந்தை வசதியைப் பயன்படுத்துகிறார்கள். நாம் இதை முழுதாகத் பயன்படுத்த முயல வேண்டும். வர்த்தக முதலீடுகள் மற்றும் நடவடிக்கைகளை விஸ்தரித்து எமது பொருளாதார நிலையை வளப்படுத்தும் சந்தர்ப்பமாக இதை வர்த்தக, முதலீட்டு, உற்பத்திஇ ஏற்றுமதி, இறக்குமதிக்கான பாதையாக எமது சமூகம் கையாள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.