தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கரிசனை

சிறையில் நீண்ட காலமாக உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கரிசனை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரனால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பேசப்பட்டடுள்ளது.குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த ஆவணத்தில், வழக்குகளின்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் நீண்ட காலமாக வழக்குகள் இடம் பெற்று வருகின்ற கைதிகள் உள்ளிட்ட 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அனுப்பப்பட்ட ஆவணத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடமாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்ட, சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் ஏற்கனவே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரியுடனும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளதாக ஆளுநர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.