இலங்கை மக்களுக்காக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்காக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இலங்கை நாடு ஒரு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கை நாட்டிற்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபோது, என் குடும்பத்தின் சார்பில் ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் அறிவித்தேன்.

இதன் அடிப்படையில், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவாக, எனது மூத்த மகனும், மக்களவை உறுப்பினருமான திரு. ப. ரவீந்திரநாத் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து இருபத்தைந்து இலட்சத்திற்கான வரைவோலை, எனது இளைய மகன் வி. ப. ஜெயபிரதீப் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் இருபத்தைந்து இலட்சத்திற்கான வரைவோலை மொத்தம் ஐம்பது இலட்சம் ரூபாய்க்கான என வரைவோலைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனைப் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புகைச் சீட்டினை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என  தெரிவித்துள்ளார்.