எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோள்

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து, எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நேற்றையதினம் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்இ நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயேச்சைக் குழு, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு,  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த கலந்துரையாில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு கட்சியினதும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.தேசிய சபையொன்றை நிறுவுவதே தமது முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும், ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் முழுமையான பிரதிநிதித்துவமும் அவசியமானது எனவும் தெரிவித்தார்.நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்களுக்கு சமமான அதிகாரமும் பிரதிநிதித்துவமும் வழங்கப்படும் எனவும், தேவைப்படும் போது அமைச்சரவைக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்திலோ அல்லது குழு அடிப்படையிலான அமைப்பிலோ இணைந்து கொள்வதாயின்  சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பான தமது தீர்மானத்தை தெரிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.