லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார் யோஷித ராஜபக்ஷ!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று (17) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
தற்போது நிலுவையிலுள்ள நிதி மோசடி மற்றும் சொத்துக் குவிப்பு தொடர்பான விசேட விசாரணை ஒன்றின் கீழ், அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகவே லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

யோஷித ராஜபக்ஷ நேற்று (16) ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருக்க வேண்டிய நிலையில், நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் சம்பந்தப்பட்ட மற்றுமொரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால் அவரால் சமூகமளிக்க முடியாமல் போனது. இந்தத் தடையை அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக எழுத்துப்பூர்வமாக ஆணைக்குழுவிற்கு முன்கூட்டியே அறிவித்திருந்த நிலையிலேயே, இன்று காலை அவர் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னதாக ‘சிஎஸ்என்’ (CSN) தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் நிதிப் பயன்பாடு மற்றும் சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பான விசேட விசாரணைகள் நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற பின்னணியில், இன்றைய தினமும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரிடம் பல மணிநேரம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதோடு, இவ்விசாரணையின் மேலதிக அறிக்கைகள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.