உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு   கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி கத்தோலிக்க திருச்சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை நாடவுள்ளது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் நேற்று  ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில்  இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 05 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சதி மற்றும் அதற்கு மூளையாக செயற்பட்டவர்கைளை தற்போதைய அரசாங்கமும் முன்னர் இருந்த அரசாங்கமும் வெளிப்படுத்தத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளார். அதேபோன்று, இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுத்து மூல கடிதம் அனுப்பியுள்ளோம்.

அதற்கும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. வெளிகொணரப்பட்டுள்ள புதிய விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பலமுறை கோரினாலும் அரசாங்கம் அதனை கவனத்தில் எடுக்காமை தெளிவாக புலப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.