தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தை  மக்கள் மன்றத்தின் முன் கையளிக்கிறேன்:  மே தினத்தில் சிவஞானம் சிறீதரன் உருக்கமான உரை.

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்’ என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 38 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்போடும், ஆயிரக்கணக்கான பொது மக்களின் பங்கேற்போடும் கிளிநொச்சியில் நேற்று பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, அந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் அதனைக் கூறினார்.

கட்சியின் இயக்கத்தை முடக்கி, உட்கட்சி ஜனநாயகத்தைச் சவாலுக்கு உட்படுத்தி, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பில் கருத்துரைக்க முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தலைமைப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டதால் என்னை இன்று நீதிமன்றில் நிறுத்தியிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் கடந்தும் கட்சியைத் தளம்பலற்றுக் கொண்டுசெல்வதற்காக நான் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகள், எதிர்கொண்ட சமரசப் பேச்சுகள், அது சார்ந்து நான் முன்னெடுத்த முயற்சிகள் என எல்லாவற்றையும் மக்களுக்கு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த விரும்புகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே நிலைப்பாட்டின் அடிப்படையில், இந்த மாபெரும் மக்கள் மன்றத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தையும் கட்சித் தலைமையின் எதிர்காலத்தையும் முன்னிறுத்தி எனது புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்’ என்றார்