பதவியை இராஜினாமா செய்தார் இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர்

ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஹமாஸ் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதை கண்டுபிடிக்க தவறியமை உட்பட தவறுகளிற்கு பொறுப்பேற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனெரல் அகாரொன் ஹலிவா தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றும்  அளவிற்கு எங்களின் புலனாய்வு பிரிவு செயற்படவில்லை என்பதை தனது இராஜினாமா கடிதத்தில் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.ஒக்டோபர் ஏழாம் திகதி சம்பவங்களிற்கு பொறுப்பேற்று பதவி விலகிய இஸ்ரேலின்  முதலாவது உயர் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிய இராணுவமும் புலனாய்வு பிரிவினரும் பல முன்னெச்சரிக்கைகளை தவறவிட்டனர் என தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.