வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவருடன் இணைந்து புளியங்குளம் பொலிஸார் இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல்.

வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருடன் இணைந்து புளியங்குளம் பொலிஸார் இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம்  இரவு இடம்பெற்றுள்ளது.

வவுனியா, சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்  பல தகவல்களைத் தெரிவித்துள்ளார். விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிஸார் என்னை அழைத்தனர்.

நான் அங்கு சென்ற நிலையில் எனது தொலைபேசி, கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கையிலும் விலங்கு போடப்பட்டது. பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிஸாரும் என்னை பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து என்னை தாக்கினார்.அத்துடன் என்னை இழுத்துச் சென்ற அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்த நபரின் வாகனத்தில் ஏற்ற முற்ப்பட்டனர். இதன்போது நான் பொது மக்களின் உதவியினை நாடி பிரதான வீதியை மறித்திருந்தேன்.

பின்னர் மீண்டும் என்னை பொலிஸ் நிலையத்திற்குள் இழுத்துச் சென்றதுடன் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவரது சப்பாத்து கால்களால் எனது நெஞ்சில் தாக்கினார். இதனை தொடர்ந்து அங்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர், என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.பொலிஸாரின் தாக்குதலினால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார். மேலும், குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.