தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலாமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக கனடா – டொராண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவையொட்டி பலரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

ரொரோன்ரோ வெஸ்ரேன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று ஞாயிறு இரவு  உயிரிழந்துள்ளார்.91 வயதான கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட அவர் தமிழீழ மண்மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக்கொண்டார். 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் நாடாளுமன்றம் சென்றார். 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்த அவர் தனது 72 வது வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். எனினும், மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் விட்டதை அடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது.

இதனையடுத்து, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறினார்.2000 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் இருந்து ஈழவேந்தன் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்தியாவை கடுமையாக விமர்சித்திக்கொண்டிருந்த காரணத்தினாலும் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார். கொழும்பு – இரத்மலானையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த ஈழவேந்தன், 2004 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்டதக்கது.