கச்சதீவு மீட்பு குறித்த விடயம் :பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை தொடர்பில் தமிழகத்தில் அதிருப்தி.

இந்தியாவில் தற்போது தேர்தல் பிரசாரங்கள் பரபரப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை தொடர்பில் தமிழகத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. கச்சதீவு மீட்பு குறித்த விடயம் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில், இடம்பெறாத நிலையில், தமிழக பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் டில்லியில் வெளியிட்டனர். எனினும் அவர்களின் தேர்தல் அறிக்கையில் கச்சதீவு விவகாரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும், கச்சதீவு மீட்புத் தொடர்பில் அண்மைக் காலமாக காரசாரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இதற்கு ஒருபடி மேலாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்போம் என் உறுதிப்படக் கூறி வந்த நிலையில், அவர்களின் தேர்தல் அறிக்கையில் கச்சதீவு விவகாரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படாதது பல்வேறு ஊகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறான நிலையிலேயே தேர்தல் அறிக்கை தொடர்பில் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோதுஇ மத்திய காங்கிரஸ் அரசு, கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது. கச்சதீவை தி.மு.க அரசு தாரை வார்த்தது குறித்த விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெற்று, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் கச்சதீவு மீட்பு தொடர்பில் குறிப்பிடவில்லை என்றாலும், கடலோர உள்கட்டமைப்பு திட்டம் வாயிலாக தீவுகளை உலகளாவிய சுற்றுலா தலமாக மேம்படுத்துவோம் என்ற, வாக்குறுதி இடம் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் நேற்று மாலை தமிழகம் வந்த பிரதமர் மோடி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் தொகுதி பா.ஜ.க, மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்.எனினும் அதில் அவர் கச்சதீவு விவகாரம் தொடர்பில் எதுவும் பேசாததும் இங்கு குறிப்பிடத்தக்கது.