கலஹா-தம்பியை அடித்து கொலை செய்துள்ள அண்ணன்.

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோகலெட்சுமி தோட்டத்தில் தம்பியை அண்ணன்  அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி (கவுன்டர்) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய அண்ணன் சில தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் இருந்து வந்துள்ளார். அதன்பின்னர் அநுராதபுரம் பகுதியில் கூலி வேலை செய்துவந்த நிலையில் நேற்று மதியம் திடீரென ஊருக்கு வந்துள்ளார்.

அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் காணி பிரச்சினை இருந்து வந்த நிலையில், அது தொடர்பில் நேற்றும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து இரவு அது சண்டையாக மாறியுள்ளது.

இதன்போது அண்ணன் கத்தி மற்றும் போத்தலால் தம்பியின் தலைப்பகுதியில் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர் அண்ணன் தப்பிச்செல்ல முற்பட்டபோது நில்லம்பை பஸ் நிலையத்தில் வைத்து அண்ணனை ஊர் மக்கள் மடக்கிபிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மற்றும் கம்பளை தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம், பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.