கனடா வாழ் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – மத்திய அரசு

காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த கனடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா – இந்தியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை கனடா நாடாளுமன்றத்தில் கொண்டு  வந்து பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா மண்ணில் வெளிநாட்டை சேர்ந்த எவரும் இங்கு வசிக்கும் குடிமகனை கொல்வது என்பது ஏற்க முடியாதது. அது கனடாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர கனடா அரசுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே புகாரை பிரதமர் மோடியை சந்தித்தபோது கனடா பிரதமர் ட்ரூடோ கூறியதாக கூறப்படுகிறது. இதனால், கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு  பரப்படுவதால் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றுள்ளது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட பின் இரு நாடுகளில் உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற ஏற்கனவே உத்தரவிட்டுள்ளன. இந்த சமயத்தில் தற்போது, கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.