உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ள மூன்று வயது கொட்டகலை சிறுமி.

செ.திவாகரன்

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை பிரதேசத்தில் வசிக்கும் செந்தில்குமார் ரேவதி தம்பதிகளின் செல்வ புதல்வியான பவிஷ்ணா தனது மூன்று வயதில் உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்து பெருமை சேர்த்துள்ளார்.

உலக சாதனை புத்தக நிறுவனமானது இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இதற்காக விண்ணப்பித்து ஏப்ரல் மாதம் சாதனை படைத்த சிறுமையாக அறிவித்து இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

தனது மூன்று வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த பவிஷ்ணா கொட்டகலை வரலாற்றில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த இரண்டாவது சாதனை சிறுமியாவார். இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய சிறுமியை பிரதேச மக்கள் பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

இச்சிறுமி எதிர்காலத்தில் கல்வித் துறையிலும், ஏனைய துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகளைப் பெற்று எதிர்காலத்தில் நாட்டிற்கு பெருமையை தேடித் தரக் கூடிய ஒருவராக மிளிர வேண்டும் என்று பலரும் வாழ்த்துகின்றனர்.