13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வலியுறுத்தினார் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எனது இளம் வயது முதல் இன்றுவரை இனப்பிரச்சினை பற்றி கதைத்துக்கொண்டிருக்கின்றோம். அப்பிரச்சினைக்கு அரசமைப்பு ரீதியில் நிலையானதொரு தீர்வு அவசியம். வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்து, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினால் போதும், வேறொன்றும் அவசியமில்லை எனச் சிலர் கூறுகின்றனர்.

இது ஏற்புடைய கருத்து அல்ல. இவ்வாறான கருத்தை நம்ப வேண்டாம். வடக்கு, கிழக்கு மக்களுக்கான உரிமைகளை ஏன் வழங்க முடியாது, உரிமைகளை வழங்காவிடின் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. இனப்பிரச்சினையை இனியும் நீடிக்க இடமளிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைக்க வேண்டாம் என எனக்குச் சொல்கின்றனர்.

அவ்வாறு கதைக்காமல் இருக்க முடியாது. 13 போதும் என்று வடக்கு, கிழக்கு மக்கள் கூறுவார்களாயின் குறைந்தபட்சம் அதைச் செய்வதற்காவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டை நேசிப்பவர்கள் போராடியாவது 13 ஐ வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.