அரசியல் கட்சிகளையும் மக்களையும் குழப்பும் நோக்கில் செயற்படும்  பசில் , ரணில் சந்திப்புகள்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற ரகசிய சந்திப்பின் போதே பசில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தான் கண்டிப்பாக போட்டியிடுவேன் என பசில் ராஜபக்சவிடம் ரணில் இந்த சந்திப்பில் உறுதியளித்துள்ளார். என்றாலும், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

பொதுஜன பெரமுனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ரகசிய உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எடுத்துள்ளதாகவும் அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. அரசியல் கட்சிகளையும் மக்களையும் ஏமாற்றும் நோக்கில் இவர்கள் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து மீண்டும் தமது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக ஆளுங்கட்சி சந்தேகம் கொண்டுள்ளது.

அதன் காரணமாகவே அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு பசிலின் தரப்பினர் கோரி வருகின்றனர். புத்தாண்டின் பின் இடம்பெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.