மரத்துடன் கார் மோதியதில் குழந்தை உட்பட மூவர் பலி

அனுராதபுரம் – பாதெனிய வீதியின் ரிதிபதியெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நாகொல்லாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுராதபுரத்தில் இருந்து பாதெனிய நோக்கி பயணித்த கார் வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம் பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். விபத்துக்கு உள்ளானவர்களை காரில் இருந்து வெளியே எடுக்க சுமார் 20 நிமிடங்கள் ஆனதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிறு குழந்தையும் ஏனைய இருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

படுகாயமடைந்த குழந்தையின் தாயும் மற்றுமொரு நபரும் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொல்லாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.