யாழ்ப்பாணத்தில் 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளன  34 வயதுடைய பெண்.

யாழ்ப்பாணத்தில்  கும்பல் ஒன்று பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், அரியாலையை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய  உள்ள பெண்ணொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பெண்ணுடைய  தாய் தந்தை மரணமடைந்ததையடுத்து, மனக்குழப்பமுற்றிருந்த  குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை- மருதங்கேணியிலுள்ள பாதுகாப்பு இல்லத்தில், நீதிமன்ற உத்தரவின்படி தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம், பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார்.

சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை இந்த கொடுமை நிகழ்ந்ததாக பெண் குறிப்பிட்டுள்ளார். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 10 பேர் வரையான ஆண்கள் தன்னை துன்புறுத்தி, வல்லுறவுக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார். அடித்து, சிகரெட்டால் சூடு வைத்து, போதை ஊசி செலுத்தி தன்னை வல்லுறவுக்குள்ளாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்ணின் உடலில் சூடு வைக்கப்பட்ட அடையாளங்கள், தாக்கப்பட்ட அடையாளங்கள், கைமுறிந்த அடையாளம் உள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தனர் என தெரிவித்துள்ளார். பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்பாடாக பதிவு செய்துள்ள பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.