ஆடம்பரமான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை தவிர்த்து பசியைப் போக்குவதற்காக மட்டுப்படுத்த வேண்டும்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான  கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விரிவுபடுத்துவதை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

நீர்கொழும்பு – படபத்தல புனித தெரேசா தேவாலயத்தில் நடைபெற்ற சமய ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர், இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பசியைப் போக்குவதற்காக மட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த கிறிஸ்மஸில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களை அலங்கரிப்பதற்காக ஒருவர் பணத்தை வீணாக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

பசியில் வாடுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்றும் எனவே, இந்த ஆண்டு கிறிஸ்மஸ் சமயத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது மட்டுமே செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், ஈஸ்டரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி, பின் வாசலில் இருந்து வந்தவர் என்பதால், அவர் இப்போது வகிக்கும் பதவியை வகிக்க மக்களின் சம்மதம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு,  தாக்குதலின் பின்னணியில் அரசியல் கை இருக்கலாம் என தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.