நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள்-எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டை விட்டு மருத்துவர்கள் வெளியேறுவதால் சுகாதாரத்துறையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக சில வைத்தியசாலைகள் மூடப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலைமை திஸ்ஸமஹாராம போன்ற வைத்தியசாலையில் ஏற்பட்டால் நோயாளர்கள் கராப்பிட்டிய போன்ற வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நோயாளர்களுக்கு அசௌகரியமான நிலையே காணப்படுவதாகவும் அந்த சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

மிகக் குறைந்த வசதிகளின் கீழ் சுகாதார சேவைகளை வழங்கும் இந்த மருத்துவர்களை இத்துறையில் தக்கவைக்க அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் தொழில் அபிவிருத்தி வாய்ப்புகள் விஸ்தரிக்கப்பட வேண்டுமெனவும் அதற்காக அரசாங்கம் தலையிட வேண்டுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.