வழக்கு விசாரணைகள் இன்றி இளைஞர்கள் தடுத்து வைப்பு’ செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 தமிழ் இளைஞர்கள், எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு தென்னிலங்கையின் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டிற்கு அவசியமற்ற இளைஞர்களின் வாழ்வை பாலாக்கும் கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென சமூக மற்றும் சமாதான நிலையத்தின் தலைவர் அருட்தந்தை ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் 13 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது.
இந்த நிலையில் அவர்களை பார்வையிடுவதற்காக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் தலைவர் அருட்தந்தை ரொஹான் சில்வா, அரசியல் கைதிகளை விடுவதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் உள்ளிட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று மெகசன் சிறைக்குச் சென்றனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அருட்தந்தை ரொஹான் சில்வா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இன்று வரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக 13 தமிழ் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இன்று உறுதி அளித்துள்ளதாக எமக்கு அறியக்கிடைக்கின்றது. குறித்த கைதிகள் ஏதாவது தவறிழைத்திருந்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அதனை நிறைவு செய்யாமல் இருப்பது சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தின் உன்னதமான வாசகத்திற்கு செய்யும் அகௌரவமாகவே நாம் காண்கின்றோம். பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டிற்கு அவசியமில்லை. வெகு விரைவில் அதனை மீளப்பெற வேண்டும். இந்த சட்டத்தின் ஊடாகவே இந்த இளம் தலைமுறையின் வாழ்க்கை சீரழிகிறது. வழக்கு விசாரணைகளை நிறைவு செய்து அவர்கள் சாதாரண வாழ்க்கையை தொடர்வதற்கு வாய்ப்பளிக்குமாறு கோருகின்றோம். என்றார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற நிலையில் அந்த சட்டத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து அடக்குமுறையை செயற்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அருட்தந்தை ரொஹான் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.