இலங்கையர்களுக்கு இந்திய கடவுச்சீட்டு:விசாரணைகளை ஆரம்பித்துள்ள தமிழக கியூ பிரிவு பொலிஸார்

இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட தமிழக பொலிஸார், இந்திய குடிவரவு மற்றும் குடியகல்வு பணியகத்தின் அதிகாரிகள் உட்பட 41 பேர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நபர்கள் சம்பந்தமான இறுதி அறிக்கை துரிதமாக இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையர்கள், வெளிநாடு செல்ல, இந்திய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழக கியூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள், இந்திய குடிவரவு மற்றும் குடியகல்வு பணியகத்தின் 14 அதிகாரிகள், இந்திய தபால் திணைக்களத்தின் 2 அதிகாரிகள் உட்பட 41 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு இலங்கை தமிழர்கள், 11 சுற்றுலா முகவர்கள் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

இந்தியாவில் இருந்து ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முகவர்கள் ஊடாக பணத்தை பெற்றுக்கொண்டு இலங்கையர்களுக்கு இவ்வாறு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.