இந்திய அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனின் இலச்சினை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு பலரும் கண்டனம்.

இந்திய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனின் இலச்சினை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தங்களின் புதிய அவதாரம் என தூர்தர்ஷன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, தூர்தர்ஷன் இலச்சினையின் நிற மாற்றம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது, நாடு முழுவதும் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான நிற மாற்றம் சட்டவிரோதமானது, தார்மீகமற்றது, பாஜக ஆதரவானதை இது காட்டுகிறது, இதை எப்படி தேர்தல் ஆணையம் அனுமதிக்கலாம்? இதை உடனடியாக தடுத்து நிறுத்தி பழைய நிறத்துக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,  உலகப்பொதுமறை தந்த வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசினார்கள், வானொலி என்ற தமிழ்ப்பெயரை ஆகாஷவாணி என மாற்றினார்கள், பொதிகை என்ற பெயரையும் மாற்றினார்கள். தற்போது இலச்சினை நிறத்திலும் காவிக்கறை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னது போன்றே அனைத்தையும் காவியமாக்கும் பாஜக திட்டத்தின் முன்னோட்டம் தான் இதுவாகும் என தெரிவித்துள்ளார்.