காணி மறு சீரமைப்பு எனக்கூறி  மன்னாரில் பல லட்சம் ரூபாய் லஞ்ச மோசடி.

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பகுதியில் காணி மறு சீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியை பெற்று தருவதாக கூறி மாந்தை மேற்கு பகுதியில் பல நபர்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். ஏமாற்று நடவடிக்கையை முன்னெடுக்கும் குறித்த நபர் பள்ளமடுவில் உள்ள மாகாண நீர் பாசன திணைக்களத்தில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளார்.

சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் குறித்த நபரிடம் பணம் வழங்கி உள்ளதாகவும் ஆனால் இதுவரை தமக்கு காணி கிடைக்கவில்லை என்பதால் விரக்தியடைந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலீஸ் நிலையத்தில் ஒவ்வொருவராக முறைப்பாடு செய்து வருகின்றனர். இவர் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் இணைப்பாளர் எனவும் கூறிவருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். எனவே காணியோடு சம்பந்தமில்லாத ஒரு அரச ஊழியர் இவ்வாறான காணி முகவராக இருந்து லஞ்சம் பெற்றதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவரால் பெறப்படும் லஞ்சப் பணத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறு சீரமைப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் குறித்த நபர் கூறியுள்ளார் என கூறுகின்றனர். கணி மறு சீரமைப்பு ஆணைக்குழு ஏக்கருக்கு முப்பது ஆயிரம் தொடக்கம் ஐம்பது ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பலருக்கு மாந்தை மேற்கு பகுதியில் காணி வழங்கி உள்ளதாகவும் தெரிய வருகின்றன.

இதில் ஒருவர் தான் பத்து லட்சத்திற்கு மேல் லஞ்சம் வழங்கி காணி பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். குறித்த நபர் மட்டும் இன்றி வேறு முகவர்களும் உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த கூட்டு லஞ்சம் பெறும் கும்பலை உடனடியாக கைது செய்து சட்டத்துக்கு முன் நிறுத்துவதுடன் இதற்கு பின்னால் உள்ள அதிகாரிகளையும் வெளிப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.