யாழ். செம்மணியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைக்க நடவடிக்கை

யாழ். செம்மணி வளைவு  பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறை சார் அதிகாரிகளும் இன்று காலை குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

யாழ் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ளது.இந்நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு திட்ட முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

குறித்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் மழை நீர் வழிந்தோடும் வழிகள் இருப்பதால் அப்பகுதியில் மைதானங்களை அமைப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஆராயப்பட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் செம்மணி பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், அங்குள்ள நிலைமைகளை அவதானித்ததுடன் விவசாயம் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறையை உள்ளடக்கியதான தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து காணொளி வடிவிலான திட்டவரைபை தனக்கு தருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.