ஜெனீவா கூட்டத்தொடத் தொடர்: ஈழத்தமிழர் விடயத்தை உள்ளக விவகாரமாக மாற்றும் முயற்சியில் ஜனாதிபதி.

வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பலவீனம் காரணமாக மக்களுக்கான அரசியல் போராட்ட களம் நலிவடைந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர். கட்சி தலைமைத்துவ போட்டி, கட்சிகளிடையேயான கொள்கை போட்டி என தமிழ்த் தேசிய கட்சிகள் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் அக்கறையற்று இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னிலங்கையின் அரசியல் காய்நகர்த்தல்களை கையாளுவதனைவிடுத்து, தமக்கான சுயநல அரசியல் காய்நகர்த்தல்களில் தமிழ் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுவருவதாகவும் விமர்சகர்கள் குற்றம் சுமத்திவருகின்றனர். பிராந்திய, உலக வல்லரசுகளை தம் பக்கம் ஈர்த்து அதற்கு ஏற்ப அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பித நிலை எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர் தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விடயத்தை நுட்பமாக கையாள்வதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துவருகினறது. ஈழத்தமிழர் விடயத்தை உள்ளக விவகாரமாக மாற்றும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகள் எந்தொவரு ஏற்பாடுகளும் இன்றி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியுகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தமிழரசுக் கட்சிக்குள் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் இழுபறிகள் நீடித்துவருகின்ற நிலையில்  அமெரிக்க, இந்திய அரசுகள் இலங்கை அரசுடன் மாத்திரம் தொடர்புகளை பேணிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.