இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் : போராட்டத்தில்  கைது  செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை.

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள்  கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இரணைமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி நகர் நோக்கி யு9 வீதி ஊடாக நகர்ந்தபோது, போராட்டத்தை பொலிஸார் வீதித்தடைகளை அமைத்து தடுத்தனர். வீதித்தடைகளை தாண்ட பல்கலைக்கழக மாணவர்கள் முற்பட்ட நிலையில் குழப்பமான நிலை ஏற்பட்டது.

கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸாரால் போராட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றினர். மிதுசன்,  கவிதரன்,  எழில் ராஜ்,  அபிஷேக், நிவாசன் ஆகிய ஐந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து போராட்டகாரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஐவரும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,  பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.