மொட்டுக் கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடலாம்: நாமல் தெரிவிப்பு.

ஜனாதிபதித் தேர்தலின்போது மொட்டுக் கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் போட்டியிடும் சந்தர்ப்பம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பத்தரமுல்லை கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாமல் ராஜபக்‌ஷ அதனைத் கூறினார்.

தற்போதைக்கு மொட்டுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கான நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.குறித்த நான்கு பெயர்களில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளது.எவ்வாறெனினும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒருவரே வேட்பாளராக நியமிக்கப்படுவார்.

அதன் காரணமாக கடைசி நேரத்தில் இந்தப் பட்டியலில் பெயர் இல்லாத புதிய ஒருவர் கூட களமிறக்கப்படலாம்.வேட்பாளர் குறித்து கவலைப்படத் தேவையில்லை. வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல. வெற்றி பெற முடியுமா என்பதுதான் முக்கியம்.ஏனெனில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டியது அவசியமாகும்.

அத்துடன், தமது அரசியல் முகாமுக்கு வெற்றியைத் தரும் எந்தக் கட்சி அல்லது சக்தியுடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார்.மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பதற்காக கிராமிய மக்களைக் தெளிவூட்டும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.