ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குபவர் ‘மூளைக் கோளாறு உள்ளவர்: வஜிர அபேவர்தன தெரிவிப்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர, இந்த நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குபவர் ‘மூளைக் கோளாறு உள்ள ஒருவர் மட்டுமே’ என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் 100 இலட்சம் வாக்குகளால் தெரிவு செய்ய வேண்டும் என்ற என்னுடைய அறிவிப்பை தொடர்ந்து முகநூலில் பல்வேறு குழுக்கள் தமது பெற்றோரை நினைவுபடுத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் பிற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் குழுக்கள் இலங்கையில் வாக்காளர் தளம் இல்லாதவர்கள் அதிக பணம் செலவழித்து இந்த பேஸ்புக் கணக்குகளை பேணுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.தாம் அறிக்கை விடும்போது இந்த குழுக்கள் 300 -400 கொமண்ட்ஸ்களை வெளியிடுவதாகவும், அது அவர்களுக்காக அல்ல என்றும் வெளிநாட்டு சூழ்ச்சிதாரர்களுக்காக என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அடித்தே விரட்டப்படுவார்கள் எனத் தெரிவித்த அவர், மக்களிடம் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு ஜனாதிபதியானால் மக்களே அடித்து பதவியில் இருந்து நீக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மேன்மையான நாடாக மாறுவதற்கு ஒற்றுமையே முக்கியம் எனவும் பதவி ஆசையில் ஜனாதிபதி பதவிக்கு விண்ணப்பித்தால் தேசம் அழிந்துவிடும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.