பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி.

பாஜகவில் நீண்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த நடிகை கௌதமி திடீரென பாஜகவில் , அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக நீண்ட கடிதம் ஒன்றையும் பாஜக தலைமைக்கு எழுதியுள்ளர்.

நடிகை கௌதமி எழுதிய கடிதத்தில், நான் 25 வருடமாக பாஜகவில் பணியாற்றி வருகிறேன். எனது வாழ்வில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாள்ளேன். தற்போது எனது வாழ்வில் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு கட்டத்தில் நிற்கிறேன்.  கட்சி தலைவர்களிடம் இருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை.

ஆனால் அதே நேரத்தில் ‘அந்த’ நபருக்கு கட்சியில் ஆதரவு இருக்கிறது. அந்த நபர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து என் வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றியுள்ளார். பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தன்னை 20 வருடத்திற்க்கு முன்னர் நான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க என்னை தொடர்பு கொண்டார். நான் தாய் தந்தை ஆதரவு இல்லாதவள். ஒரு குழந்தையுடன் இருந்தேன். அதனால் அழகப்பனை நம்பினேன்.

ஆனால், எனது சொத்துக்களை, பணத்தை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன். எனக்கு தமிழக முதல்வர் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இருக்கிறது.

மேலும், 2021 தேர்தல் சமயத்தில் ராஜபாளையத்தில் நான் கட்சிக்காக பணியாற்றினேன் . ஆனால் எனக்கு அந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தும் நான் கட்சிப்பணியை துவங்கினேன்.  25 வருடங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தும், முழுமையான ஆதரவு இல்லாததையும், மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் கடந்த 40 நாட்களாக தலைமறைவாக இருக்கும் அழகப்பன் பற்றி உணர்ந்தும் அமைதியாக இருப்பது வேதனை அளிக்கிறது.

நான் இன்று இந்த ராஜினாமா கடிதத்தை மிகுந்த வேதனையிலும் வருத்தத்திலும் எழுதுகிறேன்.  எனக்கும் என் குழந்தையின் எதிர்காலத்துக்கும் ஒரு தனிப் பெண்ணாகவும் ஒற்றைப் பெற்றோராகவும் நீதிக்காகப் போராடுகிறேன் என அந்த கடிதத்தில் நடிகை கௌதமி குறிப்பிட்டுள்ளார்.