நடிகர் விஜய்க்கு இலங்கை தமிழ் எம்பிக்கள் அவசர கடிதம்..!

இலங்கையில் வரும் 20-ஆம் தேதி லியோ திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று இலங்கை தமிழ் எம்பிக்கள் செல்வம், அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், தங்களது லியோ திரைப்படம் இம்மாதம் 19ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இலங்கையில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தங்களது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை எங்கள்  தமிழர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அதேவேளை இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் உங்களின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.

அண்மையில் முல்லை தீவு மாவட்ட நீதிபதி திரு.சரவணன் ராஜா அவர்கள் மீதான இலங்கை அரசின் அழுத்தத்தினாலும், உயிர் அச்சுறுத்தலினாலும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் நீதி கோரி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த மாதம் இருபதாம் தேதி வடக்கு கிழக்கில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த நாளில் தங்களது திரைப்படம் வெளிவருவது எங்களது போராட்டத்திற்கு பின்னடைவாகவே இருக்கின்றது. அத்துடன் அது ஈழத் தமிழர்களை அவமதிக்கும் செயல்பாடாகவே இருக்கும்.

ஈழ தமிழர்களுக்கும் உங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதனாலும்,  பல லட்சக்கணக்கானோர் உங்களுக்கு ரசிகர்களாகஇருப்பதனாலும், லியோ திரைப்படக் காட்சிகளை இந்த மாதம் 20ஆம் தேதி இலங்கையில் நிறுத்தி வைக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.