பிரிட்டனின் டியாகோகார்சியாவில்  இருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள்  இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி.

இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இலங்கையில் கடும் ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக சிறிய மீன்பிடி படகில் புறப்பட்டவர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு டியாகோ கார்சியாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். 2021 ஒக்டோபர் 3 முதல் அவர்கள் அந்த தீவில் சிக்குண்டுள்ளனர்.அவர்கள் புகலிடம் கோரிய வேளை பிஐஓடி ஆணையாளர் அவர்களை சட்டபூர்வமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என தெரிவித்தார். புகலிடக்கோரிக்கையாளர்கள் பத்து பேர் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.பி.ஐ.ஓ.டி. ஆணையாளரின் தீர்மானம் எடுக்கும் நடைமுறை பிழையானது என வாதிட்டனர்.

அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நீதித்துறை மறு ஆய்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.எனினும் பி.ஐ.ஓ.டி. ஆணையாளரை பிரதிநிதித்துவம் செய்த சட்டத்தரணிகள் தங்கள் ஆதாரங்களை மறுபரிசீலனை செய்வதற்கும் தங்கள் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் இணங்கினர்.ஆணையாளர் தற்போது குறிப்பிட்ட பத்து பேரினதும் பாதுகாப்பு கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்ய இணங்கியுள்ளார்.

இந்த வழக்குடன் தொடர்பற்ற புதியவர்கள் இந்த மறுபரிசீலனையை முன்னெடுப்பார்கள். டியாகோகார்சியாவில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்துவதற்கான உத்தரவை ஆணையாளர் விலக்கிக்கொண்டுள்ளார். அவர்களின் பாதுகாப்பு கோரிக்கைகள் புதிதாக ஆராயப்படும். எங்கள் நீதித்துறை மறு ஆய்வுக்கு பதிலளிக்கும் வகையில் புகலிடக் கோரிக்கைகளைத் தீர்மானிப்பதற்கான டியாகோகார்சியாவில் உள்ள அமைப்பை மாற்றியமைத்து அது தயாரித்த சட்டவிரோத முடிவுகளை திரும்பப் பெறுவதற்கான ஆணையரின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

என புகலிடக் கோரிக்கையாளர்கள் எட்டுபேரின் சொலிசிட்டர்களான டொம்சோர்ட் ஓவ் லேய் டே தெரிவித்துள்ளார். சர்வதேச பாதுகாப்பிற்கான கோரிக்கைகளை மிகவும் அவதானமாக கவனத்துடன் ஆராயவேண்டும் பிஐஓடி ஆணையாளரின் தீர்மானம் அந்த தராதரத்தை பின்பற்றவில்லை.சர்வதேச பாதுகாப்பிற்கான அவர்களின் கோரிக்கைகளை நியாயமாகவும் உரிய முறைப்படியும் ஆராய்வதற்காக டியாகோ கார்சியாவில் உள்ளவர்களை மூன்றாவது நாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.