கனடாவில் இருந்து சென்றிருந்த  இருவர் மீது மட்டக்களப்பில் தாக்குதல்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு நிகழ்வுகளுக்காக கனடாவில் இருந்து சென்றிருந்த இருவர் மீது மட்டக்களப்பில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் தலைவர் மற்றும் செயலாளர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 150 வருடத்தை நிறைவுசெய்யும் முகமாக பல நிகழ்ச்சிகள் மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்றன. அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஏராளமான பழைய மாணவர்கள் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா,  அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ளார்கள்.

இந்நிலையில் கனடா நாட்டில் இருந்து வந்தவர்கள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளான ஒருவரைத் தொடர்புகொண்டபோது, தன்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான முறைப்பாட்டை பொலிஸாரிடம் செய்ய உள்ளாகவும், கனடா தூதரகத்திடமும் தமக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.