இரவில் தாமதமாக தூங்குபவர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நம்மில் பலரும் இரவு நேரங்களில் தாமதமாக தூங்குவதுண்டு. நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது இரவு நேரங்களில் வேலைகள் பார்ப்பது போன்றவற்றினால் வெகு நேரம் முழித்திருக்கக் வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் நாம் காலையில் தாமதமாகவும் எழுந்திருக்கிறோம்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இரவில் தாமதமாக தூங்குவது பல்வேறு நோய்ககளை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, இரவில் அதிகநேரம் முழித்திருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு இதய நோய், நீரழிவு நோய், எடை அதிகரிப்பு மற்றும் மனசோர்வு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும், சரியான நேரத்திற்கு தூங்க செல்பவர்களை விட, இரவில் நீண்ட நேரம் முழித்திருப்பவர்கள் சிறு வயதிலேயே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் முழித்திருப்பவர்கள் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருக்கும் 25 வயதுடைய 23,000 பேரைத் தேர்ந்தெடுத்து, 37 வருடங்களாக அவர்களில் 8,728 பேரின் இறப்புகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் முடிவில் இரவில் சீக்கிரமாக தூங்கி, காலையில் சீக்கிரம் எழுபவர்களை தவிர, மற்றவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 9% அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அதிகாலை சீக்கிரமாக எழுந்திருக்கும் பெண்களை விட, இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டது. இத்தகைய நோய்கள் வராமல் இருப்பதை தவிர்க்க மக்கள் இரவு நேரங்களில் சீக்கிரமாக தூங்க வேண்டும்.

மேலும், லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை அதிகமாக இரவு நேரங்களில் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இத்தகைய சாதனங்களில் இருந்து வெளிவரும் நீல நிற ஒளியானது கண்களில் எரிச்சலை ஏற்படுத்தி, தூக்கம் வராமல் செய்யக்கூடும். ஒரு நபருக்கு தினசரி 8 மணிநேர தூக்கம் மிக அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் சீக்கிரமாக உறங்கி காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளனர். இதனை கடைபிடித்தால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.