முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத கொடூரமான துயரங்களுடன் கூடிய யுத்தம் முடிந்து 14 வருடங்கள் கடந்த நிலையில் தமிழ் மக்களுக்கு இது வரை நீதி கிடைக்காத நிலையில் இன்று வரை பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார இறுதி நாள் நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்றையதினம் நினைவு கூறப்பட்டது.

அந்தவகையில் பல உயிர்களின் இரத்தக் கறைகள் படிந்த முள்ளிவாய்க்கால் மண்ணில்,தமது உறவுகளை தமிழ் மக்கள் கண்ணீர் மல்க இன்று நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

இறந்த உறவுகளின் நினைவில் கரைந்த மக்களை இன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

பாலச்சந்திரன் இறந்து கிடந்த காட்சியும் அவரின் அப்பாவிதனமான இறுதி தருணங்களும் என்றும் தமிழரின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

அப்படியிருக்கையில் இன்று முள்ளிவாய்க்காலில் பாலசந்திரனின் இறுதி தருணங்களை ஒரு சிறுவன் மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளார்.

பாலச்சந்திரனை போன்று உடையணிந்து,அவர் இறுதியாக அமர்ந்திருந்ததை போன்று ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார்.

இந்த காட்சி அப்படியே பாலச்சந்திரனை பிரதிபலிப்பதாக இருந்தமையால் அங்கிருந்த மக்கள் அனைவரும் அந்த சிறுவனை பார்த்து,மெய்சிலிர்த்து போனதுடன் பலர் கண்ணீர் சிந்தியுள்ளனர்.