நாடுமுழுவதும் சைக்கிள் பாதைகள் நிறுவ நிதி ஒதுக்கீடு.

Kumarathasan Karthigesu

பள்ளியில் சிறுவருக்கு சைக்கிள் ஓடப் பயிற்சி.

நாட்டில் கைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்காக அரசு பெருமளவு நிதிச் செலவில் திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளது. நாடெங்கும் தெருக்களில் சைக்கிள்கள் செலுத்தும் தனியான பாதைகளை நிறுவுவதற்கும் புதிதாகச் சைக்கிள் வாங்குவோருக்கு உதவவும் இரண்டு பில்லியன் ஈரோக்களைப் பிரதமர் எலிசபெத் போர்ன் ஒதுக்கியிருக்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு புதிய “சைக்கிள் திட்டம்” (plan vélo) வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி 2027 ஆம் ஆண்டுக்குள் சுமார் 80 ஆயிரம் கிலோ மீற்றர்கள் நீளசைக்கிள் பாதைகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கிலோ மீற்றர்கள் சைக்கிள் பாதைகள் நிறுவப்படும்.

புதிய சைக்கிள்களை அல்லது பாவித்த சைக்கிள்களை வாங்குவோருக்கு நிதி உதவி அளிப்பதும் இந்தத் திட்டத்தில் அடங்கும். அதேசமயம் 6-11 வயதுக்கு இடைப்பட்ட பள்ளிச் சிறுவர்களுக்கு அவர்களது பாடசாலையிலேயே பாதுகாப்பான சைக்கிள் ஓட்டப் பயிற்சியை வழங்குவதற்கு அரசு விருப்பம் கொண்டுள்ளது. “சைக்கிள் ஓடுவதற்குத் தெரிந்து கொள்ளல்” (Savoir rouler à vélo”) என்ற திட்டத்தின் கீழ் தற்சமயம் குறிக்கப்பட்ட எண்ணிக்கையான மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுவருகின்ற சைக்கிள் ஓட்டப் பயிற்சியை 2027 இல் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்தப் புதிய சைக்கிள் திட்ட விவரங்கள் அமைச்சரவையின் உள்ளக கூட்டம் ஒன்றில் வெள்ளிக்கிழமை முன்வைக்கப்படவுள்ளது.