நாம் வாழும் இந்த மண்ணும், எம்மை தாங்கி நிற்கும் பெண்ணும் எந்நாளும் போற்றி புகழப்பட வேண்டியவர்கள்-ஜீவன்

மகளிர் தின நிகழ்வுக்காக செலவிடும் பணத்தை மகளிர் நலன்புரி திட்டங்களுக்காகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்துமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, அவர் இவ்வாறு பணிப்புரையை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் வாழும் இந்த மண்ணும், எம்மை எல்லா வழிகளிலும் தாங்கி நிற்கும் பெண்ணும் எந்நாளும் போற்றி புகழப்பட வேண்டியவர்கள்.

எமது இதய அறையில் உச்ச இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள். எனவே, நிகழ்வு நடத்தி அல்ல, செயற்பாடு மூலமே அவர்களுக்கான அங்கீகாரத்தை நாம் வழங்க வேண்டும். எனவே , நிகழ்வுகளுக்காக செலவிடும் பணத்தை மகளிர் நல திட்டங்களுக்காகவும், பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்துங்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது மகளிருக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் தோட்ட தலைவிமார் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சிசபைத் தேர்தலில் அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேசிய சபைக்கு உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இப்படி பல அங்கீகாரங்களை வழங்கி, அதன்மூலம் பெண்களை கௌரவிப்போம் – போற்றுவோம். அதுவே அவர்களுக்கும் தேவை. மாறாக ஒருநாள் நிகழ்வுகள் அல்ல” – என்றார் ஜீவன் தொண்டமான்.