யாழ்ப்பாணத்தில்  வாள்வெட்டுத் தாக்குதல்: கனடாவில் இருந்து நிதியளிக்கப்பட்டதாக தகவல்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து நிதியளிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.கனடாவிலிருந்து ஒருவர் அனுப்பிய பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த 26 ஆம் திகதியன்று வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் ஈடுபட்டதாக கூறி, மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலை பகுதியைச் சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததுடன் அவரது மகிழூந்தும் சேதமாக்கப்பட்டது.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடாவிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் அனுப்பப்பட்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. அத்துடன், பணம் அனுப்பியவர் வாள்வெட்டு சம்பவத்திற்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் வந்துள்ளார். இதன்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.