பாரிஸ் பூங்காவில் பெண்ணின் உடற் பாகம் மீட்பு!

முண்டத்தின் ஒரு பகுதியே பை ஒன்றில் கண்டுபிடிப்பு,உடனடியாக பூங்காவை மூடி பொலீஸார் அங்கு சல்லடை.

பாரிஸ் நகரின் பிரபல புட் சுமோ பூங்காவில்(parc des Buttes-Chaumont) பெண் ஒருவரது உடற் பாகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மரத் தோப்புப் பகுதி ஒன்றில் குப்பைப் பை ஒன்றினுள் கிடந்த அந்த உடற்பாகத்தைப் புல்லுத் தரையைப் பராமரிக்கின்ற பூங்காப் பணியாளர்களே முதலில் கண்டனர் என்று அறிவிக்கப்படுகிறது.

பெண் ஒருவரது இடுப்புப் பகுதியே குப்பை சேகரிக்கும் பை ஒன்றினுள் இன்று நண்பகல் வேளை கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகக் குற்றவியல் பொலீஸ் வட்டாரங்களை ஆதாரம்காட்டிப் பாரிஸ் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்துப் பாரிஸ் நகரில் 19 ஆவது நிர்வாகப்பிரிவில் (XIXe arrondissement) அமைந்துள்ள அந்தப் பூங்கா உடனடியாக மூடப்பட்டிருப்பதாக அந்த நிர்வாகப் பிரிவின் முதல்வர் பிரான்ஷூவா டானியோ (François Dagnaud) தெரிவித்திருக்கிறார். பாரிஸ் நீதித்துறைப் பொலீஸ் பிரிவின் குற்றவியல் பகுதியினர் பூங்காவை மூடி அங்கு சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

மீட்கப்பட்ட மூலக் கூறு அந்தப் பெண் யார், எந்தத் திகதியில் கொல்லப்பட்டார் என்பன போன்றவற்றை உறுதிசெய்வதற்குப் போதுமானவையாக இல்லை. அவசரமாக உடற்கூற்றுப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பூங்காவுக்குள் பற்றைகள் இடையே அந்த உடற் பகுதியை மறைத்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முயற்சிகள் தொடக்கப்பட்டுள்ளன.

25 ஹெக்டேர் பரப்பளவுள்ள பூங்காவின் ஐந்து நுழை வாயில்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமெராக்களின் காட்சிகள் பரிசோதிக்கப்படவுள்ளன. -விசாரணையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் இவ்வாறு செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளன.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப் படுகின்றன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">