முல்லைத்தீவு-சிறுவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸாரால்  தாக்குதலுக்குளான இரண்டு சிறுவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

15 மற்றும் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் இரண்டுபேர் நேற்று முன்தினம் இரவு (2) புதுக்குடியிருப்பு தேவிபுரம் அ பகுதி புதியகுடியிருப்பு  வீதியால் சென்றுகொண்டிருந்த நிலையில் அப்பகுதியால் இரவு முற்சக்கரவண்டியில் ரோந்துப்பணிக்காக சென்ற பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

தமது வீட்டின் அயல்வீட்டில் உள்ள நண்பன் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு அருகில் உள்ள தமது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த வேளை அப்பகுதியால் முற்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்த மூன்று பொலிஸார் மேற்படி சிறுவர்கள் இரண்டுபேரையும் மறித்து எங்கு சென்று வருகிறீர்கள் என வினாவியதோடு கஞ்சா குடித்து விட்டா வருக்கின்றீர்கள் என கேட்டு பொல்லு தடிகளாலால் மிக மோசமாக தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறு சிறுவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட பொலிஸார் மதுபோதையில் காணப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான உள்ளான சிறுவன் ஒருவரது தொலைபேசியையும் பறித்தெடுத்துவிட்டு தாக்குதல் மேற்கொண்டுவிட்டு மீண்டும் வழங்கியுள்ளதாகவும் பாதிக்கப்படுள்ள சிறுவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான சிறுவர்களில் 15 வயதுடைய சிறுவனின் கைபெருவிரல் எலும்பு முறிவு ஏற்படுள்ளதோடு மற்றைய சிறுவனுக்கும் மிக மோசமான உடல் அடி காயங்கள் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான சிறுவர்களில் ஒருவர் தொடர்ந்தும் முல்லைத்தீவு மாவட்ட பொது  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதோடு ஒருவர் வைத்தியசாலையிலிருந்து இன்று (04)வீடு சென்றுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்ற அன்றைய இரவு 12 மணிக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்வதற்க்காக தாக்குதலுக்குள்ளான சிறுவர்களின் பெற்றோர் சென்ற போதிலும் இரண்டுமணிநேரம் காத்திருக்கவைத்ததோடு பொலிஸாருக்கு எதிராக எம்மிடம் முறைப்பாடு செய்யமுடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தெரிவித்ததோடு முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியேட்சகர் அலுவலகத்தில் சென்று முறைப்பாடு செய்யுமாறு புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியேட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய குறித்த சிறுவர்களின் பெற்றோர் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அத்தோடு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்வதற்காக ஏற்பாடுகளை பாதிக்கப்படுள்ள சிறுவர்களின் பெற்றோர் மேற்கொண்டு வருகின்றனர்.