கொலம்பியாவில் சட்ட விரோதமாக விமான சக்கரத்தில் அமர்ந்து பயணித்த 2 பேர் மரணம்.

வடஅமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சிலி நாட்டின் சாண்டியாகோவில் இருந்து ஏவியன்கா நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் விமான ஊழியர்கள் விமானத்தில் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது விமானத்தின் அடிப்பகுதியில் முன்பக்க சக்கரத்தில் மனித உடல் போல ஏதோ ஒன்று தென்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சோதனை செய்தபோது 2 வாலிபர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவர்கள் 2 பேரும் எப்படி உயிரிழந்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ”வாலிபர்கள் சட்ட விரோதமாக விமானத்தின் சக்கரத்தில் அமர்ந்து கொண்டு பயணம் செய்தபோது இறந்திருக்கலாம் என தெரிகிறது. மேலும் பிணங்களுக்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட சூட்கேசில் உள்ள ஆவணங்களை பார்த்தபோது அவர்கள் இருவரும் டொமானிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்த 15 மற்றும் 20 வயதுடையவர்கள் என்பது தெரிய வந்தது. இது பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.