இலங்கைத் தமிழரசுக் கட்சி திருந்தாவிட்டால், ரெலோவும், புளொட்டும் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு.

தமிழ்த் தரப்புக்கள் ஒன்றாக இல்லை. முதலில் நீங்கள் ஒன்றுபடுங்கள். அதன் பின்னர் தீர்வைக் கேட்கலாம் என்று சிங்களத் தலைவர்களின் கிண்டலுக்கே இடம்கொடுத்துள்ளது இலங்கைத் தமிழரசுக் கட்சி. அந்தக் கட்சி திருந்த வேண்டும். இல்லையேல் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும்தான் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்’ – என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய முடியாது என்றும், பரந்துபட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுக்கு ஒருபோதும் இடமில்லை என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.தமிழ்த் தேசியக் கட்சிகளின் பரந்துபட்ட கூட்டமைப்பு உருவாக்கம் தொடர்பான பேச்சுக்களில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்து வரும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரிடம், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு கூறினார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்று அவர்கள் நீண்ட காலமாகக் கூறிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இப்போது மீண்டும் அதைச் சொல்லியிருக்கின்றார்கள்.பல்வேறு விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் நிலையில்தான் பரந்துபட்ட கூட்டமைப்புக்கான கோரிக்கையை பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும் முன்வைத்தன. அதைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துள்ளது. ஒன்றில் தமிழரசுக் கட்சி திருந்த வேண்டும். இல்லையேல், புளொட்டும், ரெலோவும் தெளிவான – திடமான முடிவை எடுக்கவேண்டும். பரந்துபட்ட கூட்டமைப்பு அமைப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்’ – என்றார்.