உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடப்படுவதற்கு காரணங்கள் என்ன? -பெப்ரல்

எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு  முன்னதாக  உள்ளூராட்சி மன்றத்  தேர்தலை நடத்துவதற்கு ஏதேனும் தடைகள் காணப்படுகின்றனவா? அவ்வாறு தடைகள் காணப்படுமாயின், அவை எவை என்பன குறித்து விளக்கம் அளிக்குமாறு  பெப்ரல்  அமைப்பினர்  தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமாக கேள்வியொன்றை முன்வைத்துள்ளனர்.

அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்திக்கொண்ட  இறையாண்மையை பலத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு மக்களுக்கு உள்ள உரிமையை பாதுகாப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதன்மையான பொறுப்பாகும் என பெப்ரல் அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இறையாண்மையை மதித்து மக்கள் பலத்தை பாதுகாத்து உரிய காலத்தில்  உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டியது, அரசியலமைப்பின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும் என பெப்ரல் அமைப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தற்‍போதைக்கும் ஒரு வருட காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலானது, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால்  நீட்டிக்கப்பட்ட ஒரு வருட காலமானது, எதிர்வரும் 2023 மார்ச் 19 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. எவ்வாறாயினும், இந்த தேர்தலானது பிற்போடப்படுவதற்கு பலதரப்பட்ட காரணங்கள் இருப்பதாக மேலோட்டமாக பார்க்கும்போதே விளங்குகிறது.

அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்திக்கொண்ட இறையாண்மை பலத்தை   பயன்படுத்திக்கொள்வதற்கு மக்களுக்கு உள்ள உரிமையை பாதுகாப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதன்மையான பொறுப்பாகும். ஆகவே, நாம் உங்களுக்கு முன் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

2023 மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்குள் ‍ உறுப்பினர்களை தெரிவு செய்து உள்ளூராட்சி மன்றங்களை  மீண்டும்  அமைக்கக் கூடிய வகையில், எந்த தினத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியும்?  மேற்குறித்த தினத்தில் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இருக்கின்றனவா?  அப்படியாயின் அந்த தடைகள் எவை என்பது குறித்தும் எமக்கு விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்ததன்படி,  ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர்  வாக்காளர் பட்டியல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டிலிருந்து  அறிமுகப்படுத்தப்பட்ட 18 வயது பூர்த்தி செய்துள்ள இளம் சமுதாயத்தினரின் பெயர் விபரங்கள் உள்வாங்கப்பட்டு 2022 நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் உறுதிப்படுத்தப்படும் என நாம் நம்புகின்றோம்.

மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாத்துக்கொள்வதற்கும் தீர்மானமிக்க செயற்பாடொன்றாகும். ஆகவே, எமக்கான பதிலை மிக விரைவில் அளிக்குமாறு  நாம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்  கேட்டுக்கொள்கிறோம் ” என குறிப்பிடப்படுள்ளது.